டில்லி

ந்த வருட நிதிநிலை அறிக்கையில் பிரதமர் மோடிக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கும் எஸ் பி ஜி பிரிவுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ் பி ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது.   கடந்த 2003 ஆம் வருடம் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இந்த பாதுகாப்பு காலத்தை அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து மாற்றம் செய்யும் திருத்தத்தைக் கொண்டு வந்தது.

கடந்த 28 ஆண்டுகளாக அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  ஆனால் கடந்த ஆண்டு இந்த பிரிவின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவே கவுடா உள்ளிட்டோருக்கான எஸ் பி ஜி பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.  எனவே 3000 பேர் கொண்ட எஸ் பி ஜி படை தற்போது பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்து வருகிறது.   நேற்று முன் தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும்  ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அந்த நிதிநிலை அறிக்கையில் பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிதியாண்டில் ரூ.540 கோடி நி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அது ரூ.60 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2018-19 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.420 கோடியாக இருந்த போது 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.