சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
j-jayalalithaa
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.
அதன்பிறகு ஜெயலலிதாவின் காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதனால் விரைவில் முதலமைச்சர் வீடு திரும்புவார் என்றும் பேசப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்கள். அப்போது, முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்ற தகவலையும் டாக்டர்கள் மறுத்தனர்.
இந்நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து மீண்டும் வதந்தி பரவியது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
.‘‘முதலமைச்சரின் உடல் நலம் சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர் கண்காணிப்பில் உள்ளார்’’ என அரசு மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.