மாஸ்கோ:
ஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக அந்நாட்டின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் ஓலெக் க்ரிட்னேவ்  உறுதிசெய்துள்ளார்.இதைப்பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த தடுப்பூசி தற்போது மூன்றாவது கட்ட சோதனையில் உள்ளது. இந்த சோதனை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி வெளியிட்ட பின்னர் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். கமலேய மையம் உருவாக்கிய எங்களுடைய தடுப்பூசி ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்”.

இந்த தடுப்பூசியை கமலேய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது.  அடுத்த மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா பெருமளவில் உற்பத்தி செய்யும் என்று கடந்த வார அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உலகில் தற்போது வரை கொரோனா வைரசுக்கான எந்த தடுப்பூசியும் வெளியிடப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி தற்போது 6 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன. இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.