மாஸ்கோ,

சிரியாவில் ரஷிய போர் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் விமானிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி நகரமான  மயாடீன் நகரை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள்  தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு உதவியாக ரஷிய போர்விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் ஹ்மெய்மிம் நகரில் உள்ள ரஷிய விமானப்படை தளத்தில்  இருந்து இன்று தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்ற சுகோய்-24 ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மேலே எழும்பும்போது,  ஓடு பாதையை விட்டு தாறுமாறாக ஓடி தரையில் மோதி நொறுங்கி தீக்கிரையானது.

இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு விமானிகளும்  உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.