பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வு  தெரிவிக்கிறது..
எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம், உலகம் முழுதும் 38 நாடுகளில் ஊடக நிறுவனங்களை  நடத்தி வருகிறது.இத் துறையில் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம்  உலக அளவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து  ஆய்வு நடத்தியது. உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான இந்திய ஊடகங்கள் பொய்ச் செய்திகளை வெளியிடுவதாகவும் இதன் காரணமாக இந்திய ஊடகங்கள், மக்களின் நம்பிக்கையை இழக்கிறது என்றும்  கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வு தெரிவிப்பதாவது:

“ ஊடக நெறிமுறைகள், சமூக பொறுப்புகள் குறித்து இந்திய ஊடகங்கள் கவலை கொள்வதில்லை.

சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகியுள்ளதால், இந்திய ஊடகங்கள் வதந்திகளைச் செய்திகளாக வெளியிடுவது அம்பலமாகியுள்ளது.

செய்தியாளர்கள் பலர், தங்களது சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் போல செயல்படுகின்றார்கள்.

உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில்  ஊடகங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற போக்கு நிலவுகிறது.

டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக வெளியிடப்படும் செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் தெரிவிக்கிறார்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொய்ச்செய்திகளைப் பரப்பும் ஊடகங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது ஆஸ்திரேலியா.  3வது இடத்தில் அயர்லாந்தும், 4வது இடத்தில் சிங்கப்பூரும், 5வது இடத்தில் துருக்கியும் பிடித்துள்ளன.