மும்பை:

டில்லி குர்கான் பகுதியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு பயின்ற மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து ஹரியானா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொன்றதாக பள்ளியின் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பல இடங்களில் கிளைகளை கொண்டுள்ள இப்பள்ளியின் நிறுவனர்கள் அகஸ்டின், கிரேஸ், ரியான் பின்டோ ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இதனால் இவர்கள் 3 பேரும் முன் ஜாமீன் பெற முடிவு செய்தனர். முன் ஜாமீன் பெற பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் நேரில் ஆஜராக வேண் டும். அவ்வாறு நேரில் ஆஜராக செல்லும்போதே போலீசார் கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் எழு ந்துள்ளது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மகாராஷ்டிரா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்து. இதையடுத்து மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் கத்கரி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, 3 பேரும் தங்களது பாஸ்போர்ட்களை மும்பை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.