பெங்களூரு: தேர்தலுக்காக குவியும் கார்ப்பரேட் நிதியை முற்றிலும் ஒட்டுமொத்தமாக தடைசெய்ய வேண்டும் என்றுள்ளார் முன்னாள் கர்நாடக முதல்வர் & மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

அவர் கூறியுள்ளதாவது, “நாட்டின் அரசியல் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படுவதோடு, நாட்டின் தேர்தல் அமைப்பையும் தூய்மையாக்க வேண்டியுள்ளது. தேர்தலுக்காக வழங்கப்படும் கார்ப்பரேட் நிதிக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும்.

நிர்வாக ஊழல் என்பது அரசியல் ஊழலை சார்ந்துள்ளது. அதேபோன்று, அரசியல் ஊழல் என்பது தேர்தல் ஊழலைச் சார்ந்துள்ளது. எனவே, முதலில் நாம் தேர்தல் முறையை சரிசெய்ய வேண்டும். அந்த முயற்சி அங்குமிங்கும் கொஞ்சமாக நடந்து வருகிறது.

அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் துவக்க நிலையில் உள்ளன. ஆனால், மைய அரசு அதிகாரத்தில் எந்த அரசியல் ஊழலும் இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நமது பிரதமர் மிகவும் நேர்மையான மற்றும் தூய்மையான மனிதராக இருக்கிறார். அது மிகப்பெரிய நேர்மறை முன்னேற்றமாகும்.

இந்த சீர்திருத்த விஷயமாக நாம் அதிகதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இறுதியில் முயன்று அடையக்கூடிய விஷயமே” என்றுள்ளார் அவர்.