டெல்லி: 2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டை தொடர்ந்து, தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந் நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தீர்மானித்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் நான் இடம்பெற்றது உண்மை தான். ஆனால் இப்போது புதுமுக வீரர் போன்று என்னை நான்  உணர்கிறேன். 7 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட வருகிறேன் என்றாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும்.

மீண்டும் விளையாட அனுமதிக்குமாறு பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 2023ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.