திருவனந்தபுரம்,

க்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்து உள்ளார்.

உலக பிரசித்திப் பெற்றது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வெளிமாநிலம் மற்றும்  வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், பக்தர்களின் வசதிக்காக  சபரிமலையில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன்  சபரிமலை அருகே உள்ள பத்தனம்திட்டாவில்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்,  சபரிமலை அருகே கேரள அரசுக்கு சொந்தமான சிறு வெள்ளி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு கம்பெனி மூலம் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் விமானம் நிலையம் தொடர்பான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும். விரைவில் விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி தடையில்லாமல் நடைபெறும். மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விமான நிலையத்திற்காக தேவையான  அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.