திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.  நடை திறப்பதையொட்டி பம்பை, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பம்பையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தினமும் ஆயிரம் பக்தர்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அய்யப்பன் கோயில் வரும் பக்தர்கள் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.