திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்படும். அப்போது சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இதையொட்டி பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக இந்தாண்டு குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.

தற்போது நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறள்ளது.

இதையடுத்து, வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.