திருவனந்தபுரம்

னைத்து வயது மகளிரும் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி விவகாரத்தால் இந்த ஆண்டு சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுச்  சிறப்பு பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதற்றம் நிலவி தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்த மண்டல காலத்திலும் இளம் பெண்கள் தரிசனத்திற்கு வரலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பினரும் சபரிமலை வருவோம் என்று அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பு சமீபத்தில் வெளியாகியது.  சபரிமலையில் இளம் பெண்கள் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவிலும் தீர்ப்பு வரவுள்ளது. எனவே இந்த ஆண்டும் சபரிமலையில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆகவே இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதையொட்டி பின் வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

*  சபரிமலை செல்லும் எல்லா பாதைகளும், வனப்பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படுகிறது.
*  அசாதாரண சம்பவங்களை எதிர்கொள்ள காவல்துறைக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
*  பம்பை முதல் சன்னிதானம் வரையிலான 4.5 கி.மீட்டர் போலீசின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படும்.
* 4 கட்டங்களாக காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

*  தடுப்பு வேலிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.
*  கமாண்டோ வீரர்கள், அதிவேக அதிரடிப்படையினர் உட்பட 23 ஆயிரம் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 700 பெண் காவல்துறையும் 48 பெண் கமாண்டோக்களும் இருப்பார்கள்.
*  சபரிமலைக்கு புல் மேடு வழியாகவும் ஏராளமா பக்தர்கள் செல்வார்கள். வழக்கமாக இந்த பாதையில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு இந்த பாதையிலும் சிறப்பு பாதுகாப்பு போடப்படும்.
*  சமூக இணையதளங்களில் அவதூறு பரப்புவது தடுக்க, செல்போன், இணையம் இணைப்புகள் துண்டிக்கப்படும்.
*  சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடிக்கக் கடைகள், தங்கும் விடுதிகள், வியாபார நிறுவனங்களில் காவல்துறை அதிரடி சோதனை நடத்துவார்கள்.
*  இலவுங்கல், நிலக்கல், பம்பை, செறியானவட்டம், வலியான வட்டம், சன்னிதானம், பாண்டித்தாவளம், புல்மேடு, உப்புப்பாறை, கோழிக்கானம், சத்ரம் ஆகிய பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக்கப்படும்.

இந்நிலையில் ஐயப்பதர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் இந்த மண்டல பூஜை வேளையில் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.