சென்னை,

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புரோ கபடி லீக்கின் தமிழ்நாடு அணியின் இணை உரிமையாளராக இணைந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த புரோ கபடி லீ்க் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புரோ கபடி போட்டிக்கு இந்திய ரசிகர்களிடையே பெருத்த ஆதரவு நிலவி வருகிறது.

தற்போது புரோ கபடியில்  8 அணிகள் விளையாடி வரும் நிலையில் தற்போது மேலும் 4 அணிகள் இணைந்துள்ளன.

இந்த ஆண்டு,  தமிழ்நாடு, குஜராத், அரியானா, உத்தர பிரதேசம் உள்பட 4 அணிகள் புதிதாக இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டின்  5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்கி அக்டோபர் வரை நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 130 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

புரோ கபடி லீக் போட்டியில் தமிழக அணி இடம் பெற்றுள்ளதால்  சென்னையில் இந்த போட்டி நடைபெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

தமிழக அணியின் உரிமையாளரான  சீரியல் தயாரிப்பு நிர்வாகியும், பிரபல  தொழிலதிபர் என்.பிரசாத் உடன் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக இணைந்துள்ளார். இதன் காரணமாக தமிழக அணி மேலும் சிறப்படைந்துள்ளது.

மற்ற அணிகளான ஜெ.டபிள்யு.டபிள்யூ குழுமமும் ஹரியானா அணியின் உரிமையாளராகவும், அதானி குழுமமும் குஜராத் அணியின் உரிமையாளராகவும், ஜிஎம்ஆர் குழுமமும் ,உத்திரப்பிரதேச அணி  உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்த கபடி திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ஐம்பது லட்ச ரூபாயும் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில்.  இந்திய வீரர்கள் மட்டுமின்றி, 12 நாடுகளை சேர்ந்த 24 சர்வதேச வீரர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.