டெக்சாஸ்

பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, வளர்த்தவரால் தண்டிக்கப்பட்டு தற்போது இறந்து விட்டதாக கருதப்படும் இந்தியச் சிறுமியின் கண்ணீர் கதை இதோ

நாலந்தாவில் உள்ளது அன்னை தெரசா ஆனந்த சேவா சதனம்.  இது தனியாரால் நடத்தப்படும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.  அந்த இல்லத்தில் அருகில் இருந்து ஒரு புதரில் அனாதரவற்றுக் கிடந்த பெண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார் பபிதா குமாரி.   அந்த இல்லத்தின் மேனேஜரான இவர் அந்தக் குழந்தைக்கு சரஸ்வதி எனப் பெயரிட்டு இரண்டரை வயது வரை வளர்த்து வந்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகள் வெஸ்லி மாத்யூஸ் மற்றும் சினி மாத்யூஸ் சரஸ்வதையை காவல் அதிகாரி ஆஷிஷ் குமார் முன்னிலையில் தத்து எடுத்தனர்.   சட்டப்படி தத்து எடுக்கப்பட்டு ஷெரின் மாத்யூஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சரஸ்வதி டெக்சாஸில் தனது வாழ்க்கையை தொடர்ந்தாள்.   சிறு வயதில் இருந்தே ஷெரினுக்கு சத்துக் குறைபாடு இருந்ததால் அடிக்கடி உணவு அளிப்பது வழக்கம்.

சினி உறங்கிக் கொண்டிருந்ததால் வெஸ்லி சிறுமியை பால் குடிக்க வற்புறுத்தி உள்ளார்.  பால் குடிக்க முடியாது என அடம் பிடித்த சிறுமியை கண்டிப்பதற்காக வீட்டின் பின்பக்கம் தனியாக நிறுத்தி விட்டு வெஸ்லி வந்ததாகவும்,  பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அவள் திரும்பி வராததால் போய் பார்த்த போது குழந்தையைக் காணவில்லை என வெஸ்லி போலீசில் தெரிவித்தார்.   அவர் கூறியதையொட்டி போலீஸ் பல விதங்களிலும் தேடி வந்துள்ளது.

தற்போது வெஸ்லி வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு சுரங்கப் பாதையில் ஒரு சிறுமியின் சடலம் குறைந்துள்ளது.   போலீஸ் மோப்ப நாயின் உதவியால் சடலம் அங்குள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  அந்தச் சிறுமி ஷெரீனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.    அந்த சடலத்தின் அங்க அடையாளங்கள் ஷெரீனுடன் ஒத்துப் போவதாகவும் ஆனால் இது வரை அது ஷெரீன் தான் என நிச்சயமாக சொல்ல முடியவில்லை என போலீஸ் தெரிவிக்கின்றனர்.

நெட்டிசன்கள் பலர் அந்த இறந்த குழந்தை ஷெரீனாக இருக்கலாம் என எண்ணி இரங்கல் செய்திகள் வெளியிடுகின்றனர்.   ஒரு சிலர் அந்தக் குழந்தையின் பெற்றோர் சரியாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.