சென்னை:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது பொதுவான பாடல்களை வெளியிட்டு வருகிறார். வந்தே மாதரம் முதலான இவரின் பாடல்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. எல்லோராலும் பாடப்படுகின்றன.

சமீபத்தில் குழந்தைகள் தினத்தன்று கூட, ஒரு பாடலைப் பாடி தன் முகநூல், டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷீர்டி சாயிபாபா குறித்து அவர் ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளார்.

இதுகுறித்து நேற்றிரவு அதாவது குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பாடலுக்கான டீஸரை வெளியிட்டுள்ளார். அதில், இருள் சூழ்ந்திருக்கும் திரையில் இருந்து சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுகிறது… சூரியக் கதிர்கள் விரிந்திருக்க, விடிந்து வெளிச்சம் பரப்புகிறது.

மேகக் கூட்டங்கள் விலக… வானில் இருந்து சாயிபாபா காட்சி தருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விரைவில் எனும் டைட்டிலுடன் டீஸர் நிறைவு பெறுகிறது. ‘ஆவோ சாய் 100’ என்கிறது அந்த ஹிந்திப் பாடல். அதாவது, ‘வா சாய்… நூறு வயது’ என்று அர்த்தம். இந்த டீஸர் சமூக வலை தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.