சாய் பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த போது பகல் நேரங்களில் அங்கு இருக்கும் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் அங்கு இருக்கிறது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக  கூறுகிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தைதான் வலம் வந்து வழிபடுகின்றனர்.

மூன்று முறை அதைச் சுற்றி வலம் வரும் பக்தர்கள், அங்கு கொடுக்கப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாபாவின் அற்புத கல்;

பாபா வாழ்ந்த காலகட்டத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு தான் அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்திருக்கிறது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல்லைப் பார்க்க முடியும்.

சாய் பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு வழிபட்டால் பாபா தங்களது குறைகளை நீக்கி  விடுவார் என்பது நம்பிக்கை. கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு ஒன்று உள்ளது. அதனை நாழிக் கிணறு என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய தோட்டத்துப் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி  பார்வைக்காக வைத்துள்ளனர்.

அவரை தரிசித்து வாழ்வில் வளம் பெறுவோம்.