மும்பை: 

எஸ்பிஐ வங்கியில் கடன்வாங்கி முறைகேடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம்  ரூ.1008 கோடி கிடைத்துள்ளதாக  அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் கடனாகப் பெற்றது. அதனையடுத்து, தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறுத்தியது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை.

இந்த நிலையில், விஜய்மல்லையா திடீரென தலைமறைவானார். அவர் லண்டனில் வசித்து வருவதாக கூறப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள விஜய்மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய ஈடுபட்டு வருகிறது. ஆனால், விஜய் மல்லையாவை இங்கிலாந்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அவர் இந்தியா அழைத்து வரப்படுவிதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விஜய்மல்லையாவின் கடனுக்காக, அவர் நடத்தி வந்தி யுனைடெட் ப்ரீவரீஸ் குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை  ஆகியவற்றை ‘வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்’ என்ற பட்டியலின் கீழ் இணைத்து எஸ்பிஐ நிறுவனம் அறிவித்தது.

இந்த வழக்கின் ஒருபகுதியாக, மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ப்ரீவரீஸ் நிறுவனத்தின் 74 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் முடக்கப்பட்டன.  கிங்ஃபிஷர் நிறுவனத்திற்காக யெஸ் வங்கியில் அடமானம் வைத்து விஜய்மல்லையா கடன் பெற்றிருந்த அந்த பங்குகளை கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கும்படி யெஸ் வங்கிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஒப்படைக்கப்பட்ட அந்த பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அமலாகத்துறை தெரிவித்துள்ளது.