சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில்  இதுவரை 8,20,712 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில இடங்களில், சரியான முறையில் கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்காத நிலையில், தொற்று பரவலும் தொடர்ந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் 31,703 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளவர்கள் 30,920 பேர். தற்போதைய நிலையில், 321 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனா தொற்று காரணமாக 462 பேர் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.