சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதன் தலைவர் சரத்குமார்  அறிவித்து உள்ளார்.  சமகவை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் சீண்டாத நிலையில், தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சமக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,  கட்சி நிர்வாகிகளுடன்  பலகட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி,  வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். அதுபோல விரைவில் நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் தனித்தே சந்திப்போம் என்றும் தெரிவித்தார்.

தாங்கள் தனித்தே போட்டியிடுவதாக மார்தட்டிக்கொண்ட சரத்குமார்,  மிகப் பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவை வசைபாடிய சரத், அதிமுக அரசை  கடுமையாக விமர்சனம் செய்து விட்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.

அதேவேளையில்,  டிடிவி தினகரன் தனித்து நிற்பது வரவேற்கத்தக்கது என்றும் அவரை பாராட்டினார்.

40 தொகுதிகளில் நிர்வாகிகள் கூட இல்லாத சமத்துவ மக்கள் கட்சி, அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சமத்துமக்கள் கட்சி வேட்பாளர், டிடிவிக்கு ஆதரவாக பணம் வாங்கியது, அதுதொடர்பாக. சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும், பலமுறை சென்னை நுங்கம்பாக்கம்  வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி மானம் போனது  நினைவிருக்கலாம்.