திருச்சி: புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினார்.தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 7 மணியளவில் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பத்திருவிழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. 28ம் தேதி காலை அம்மன் தைப்பூசத்திற்காக பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம் வழியாக வட திருக்காவேரி சென்றடையும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு மேல் அண்ணன் ரங்கம் ரெங்கநாதரிடம் தங்கை சமயபுரம் அம்மன் சீர் பெறும் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.