மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேனேஜர் தனக்கு வந்த ஒரு கடிதத்தை படித்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாராம். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்:

mallaya

தாங்கள் விஜய் மல்லையாவுக்கு தந்த கடனை தள்ளுபடி செய்த செய்தியை அறிந்தேன். “மிக நல்ல நடவடிக்கை” அதற்காக தங்களை நான் மனமார பாராட்டுகிறேன். அதே போல எனது ரூ.1.5 லட்சம் கடனையும் தள்ளுபடி செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
இப்படிக்கு
பாவுராவ் சோனாவானே
நாசிக் மாவட்டம் திரையம்பாகேஷ்வர் எனும் இடத்தில் வசிக்கும் ஏழை துப்பரவு தொழிலாளர் பாவுராவ் சோனாவானே நோயுடன் போராடிக்கொண்டிருந்த தனது மகனை மீட்க மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இக்கடிதத்துக்கு இன்னும் தனக்கு மேனேஜர் பதில் அனுப்பவில்லை என்று சொல்லும் பாவுராவ் வங்கியின் பதிலுக்காக காத்திருக்கிறார்.
இதற்கிடையே பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையாவின் கடனை ரத்து செய்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால் இது குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி இந்த விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “கடன் தள்ளுபடி” என்ற வார்த்தை தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவருடைய கடன் எப்படி தள்ளுபடி முடியும்? அந்தக் கடன்களை மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.