சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சித் தலைவராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக தேவி எஸ்.மாங்குடியும், அதிமுக சார்பாக பிரியதர்சினி அய்யப்பன் ஆகிய இருவர் போட்டியிட்டனர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேவிமாங்குடி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்  அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கினார்.

அப்போது, அங்கு வந்த அதிமுக வேட்பாளர் பிரியதர்ஷினி வாக்குவாதம் செய்து, தேவி மாங்குடியிடம் இருந்து சான்றிதழை பிடுங்கி பிரச்சினை செய்தார். இதையடுத்து தேர்தல் அலுவலர் பிரியதர்ஷினி வெற்றிப் பெற்றதாக சான்றிதழ் வழங்கினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வீடியோவும் வைரலானது. இருவருமே தாங்கள்தான் வெற்றிபெற்றதாக அறிவித்து வந்தனர். இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் நீதிபதி எம் துரைசாமி மற்றும் நீதிபதி டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்திய நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக உத்தரவிட்டு உள்ளது. மேலும், தேர்தல் அலுவலர் முதலில் தேவி மாங்குடிக்க வழங்கிய வெற்றிக்கான படிவம் 25 செல்லுபடியாகும், என்றும்,  பிரியதர்ஷினிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இரண்டாவது படிவம் 25 செல்லாது என்றும்,   முதலில் வெற்றி அறிவிப்பை தேர்தல் அலுவலர் அறிவித்த பிறகு, மாற்றி அறிவிப்பது செல்லாது என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

இருவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கியதாக ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்தி… 

சிவகங்கை மாவட்டத்தில், வெற்றிபெற்ற வேட்பாளரின் சான்றிதழை தட்டிப்பறிக்கும் மற்றொரு வேட்பாளர் – வீடியோ