சேலம்:

சேலம், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பயன்தரத்தக்க மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் மக்களின் குடிநீர் பற்றாக்குறை தீரும் என்று நம்பப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தின் வறட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விட வேண்டும் என்று,   நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதி மக்கள் நீண்டநாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுபோல,  அணையின் உபரிநீரை வீணாக்காமல்,  சரபங்கா, வசிஷ்ட மற்றும் திருமணிமுத்தாறு  ஆறுகளை இணைப்பதன் மூலம் சேலம், நாமக்கல், அரியலூர், விழுப்புரம், கடலூர் என 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய தமிழகஅரசு,  காவிரி உபரி நீரை சேமிப்பதுடன்,  குடிநீர் பிரச்னையும் தீர்க்கும் வகையில்,  சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் மேட்டூர் – சரபங்கா நீரேற்றத்திட்டத்திற்கு முதல்கட்டமாக இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. முதல்வர் எடப்பாடி   பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.

. 565 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 வட்டங்களில் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும், மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும்  உபரி நீர், சரபங்கா வடிநில பகுதியில் உள்ள வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும்என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.