கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த சரத்குமார்: ஒட்டுமொத்த ஊரடங்குக்குக் கீழ்ப்படிய, நம் ஒற்றுமையைக் காட்ட நேரம் இது. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை, அரசாங்க ஊழியர்களின் அயராத பணிகளை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு நமது ஆதரவும், பிரார்த்தனைகளும் தேவை. அவர்களுக்கு நாமும் சுமை கூட்ட வேண்டாம். வீட்டிலேயே இருப்போம் என பதிவிட்டுள்ளார் .