திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிகவும் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் போது பக்தர்கள், குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு வேண்டுதலுக்காகவும் விரதமிருப்பர். இதற்காக திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் வாய்ப்பு உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் தங்கவும், நாள்தோறும் கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகள் மற்றும் சுவாமி எழுந்தருளும் விழாவில் பங்கேற்பர். 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் கிரிப்பிரகாரம் அகற்றப்பட்டதை தொடர்ந்து, கட்டடத்தின் தன்மையை பாதுகாக்கும் விதமாக கோவில் அருகில் உள்ள விடுதிகள் மற்றும் அறைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டு கோவில் வளாகத்திலேயே, பக்தர்கள் தங்குவதற்காக பந்தல் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டும் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பதற்காக, கோவிலை சுற்றி ஆங்காங்கே தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல கிரிப்பிரகாரத்திலும் தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரீரு நாட்களில் முடிவடையும் என்று தெரிகிறது. சஷ்டி விரதத்தின் போது பெரும்பாலான பக்தர்கள் தண்ணீர் மட்டுமே அருந்துவதுண்டு. அதனால் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பந்தல்களில் குடிநீர் வசதியும், அதே பகுதியில் கழிப்பறை வசதியும் செய்ய கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.