திருவாரூர்: தமிழக முதல்வராக வி.கே சசிகலா வருவது என்பது மக்கள் விரோத செயல் என்ற மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் முதல்வர் பொறுப்பு ஏற்க இருப்பது உறுதியாகி உள்ளது.

சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்திருக்கிறது” என்று கூறினார்.

முன்னதாக ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக எந்தவொரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே எடுக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.