சென்னை:

சசிகலா கணவர் நடராஜன் இன்று குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1994ம் ஆண்டு லெக்சஸ் எனும் வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் உள்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் 4 பேருக்கும் நடராஜன் உள்பட 4 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு கூறியது. 4 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு நடராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களில் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் தான் நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்து இன்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் இன்று மாலை திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் நிலை பாதித்துள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.