கோவை,
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பதான் காரணம் என்ற அதிமுக எம்எம்ஏவான ஆறுக்குட்டி பகிர் தகவலை தெரிவித்துள்ளார்.
அவரது இந்த தகவல் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்த அதிமுக இரண்டாக உடைந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தவர் ஆறுகுட்டி எம்எல்.ஏ. பின்னர், ஓபிஎஸ் அணி தன்னை மதிக்கவில்லை என்று கூறி கடந்த மாதம் எடப்பாடி அணிக்கு தாவினார்.
இந்நிலையில், தற்போது இரு அணியினரும் ஒன்றிணைந்துள்ள நிலையில, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனியாக கோலோச்சி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் ஆறுகுட்டி எம்எல்ஏ கூறியதாவது,
மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு முக்கிய காரணம் சசிகலா குடும்பம்தான் என்றும், ஆட்சியே கவிழ்ந்தாலும் சசிகலா குடும்பத்துக்கு அதிமுக கட்சியில் இடமில்லை என்று அதிரடியாக கூறினார்.
மேலும், அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டினால் யாருக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும் என்றும்,தினகரனும், திவாகரனும் யார்? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.
அவர்கள் அதிமுக.,விற்காக போராடினார்களா, சிறை சென்றார்களா? என்று காட்டமாக கூறினார்.
மேலும், நாஞ்சில் சம்பத் ஒரு கூட்டத்தில் பேச ரூ.50,000 வாங்குகிறார். அவர் யாசகம் பெற வந்தவர். ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி விமர்சிக்க நாஞ்சில் சம்பத்திற்கு என்ன தகுதி உள்ளது. அவர் ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். புகழேந்தி, கர்நாடக அரசியலை மட்டும் பார்க்க வேண்டும் என்று அதிரடியாக கூறினார்.
அதிமுக.,வில் கடுமையாக உழைத்து வரும் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்க சசிகலா யார்? தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்திற்கு அதிமுக.,வில் இனி இடம் கிடையாது.
சசிகலா குடும்பத்தால், அவர்களால் வந்த சொத்து குவிப்பு வழக்கின் காரணமாகவே இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்க வேண்டிய ஜெயலலிதா விரைவில் மரணம் அடைந்து விட்டார். இவர்கள் தந்த கஷ்டதாலேயே ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மரணம் அடைந்துள்ளார் என்று பகிர் தகவலை வெளியிட்டார்.
தினகரன் முடிந்தால் ஆட்சியை கலைத்து பார்க்கட்டும் என்றும் சவால் விட்டார். மேலும், அதிமுக.வும் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். சசிகலா பேச்சைக் கேட்டு புதுச்சேரி ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சியை கலைத்தால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
அதிமுக பொதுக் குழுவை கூட்ட நாங்கள் தயார். அதில் கலந்து கொண்டு, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவர்கள் தயாராக உள்ளனரா?
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைத்து தரப்பினரும் கூறிவரும் நிலையில், தமிழக அரசும் விசாரணை கமிஷன் நியமித்துள்ளது. இந்த தருணத்தில், அதிமுக எம்எல்ஏ ஒருவரே ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என்று சொல்லியிருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.