சென்னை: சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்என அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பு பேசப்பட்ட நிலையில், அதிமுகவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  இதனால், அவரை அரசியலில் இருந்து ஒதுக்க வைக்க முயற்சிகளும் நடைபெற்று வந்தது.  அவரது உறவினர்களும் சசிகலாவை பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  எதிர்பாராதவிதமாக   தமிழக அரசியலில் இருந்து  விலகுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். அக்கா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். அம்மா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து அம்மாவின் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் என உளமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் 4 அணிகள் உருவாவதையும் தடுத்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, ” சசிகலாவின்  அரசியல் முடிவு ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய வழி வகுக்கும். ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியதற்கு நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்றார்.