கோவை: சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: உச்சநீதி மன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. ஆனாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை அறிந்து, அவர்கள் நலனுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்தவர்களில் 41 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள். அவர்களில் 6 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீடு வழியாக 313 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது என்றார்.

அப்போது, சசிகலாவின் விடுதலை அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? என்று செய்தியாளர்கள் கேள்வி  கேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.