பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வி.கே. சசிகலா, பெங்களூரு சிறையில் விதிகளை மீறி நடந்துகொள்வது ஆதாரபூர்வமாக அம்பலமாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டபோது, சசிகலா தனக்கு  அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என்று சில கோரிக்கைகளை வைத்தார். இவை நிராகரிக்கப்பட்டது.

பிறகு, அசியல்வாதியாகிய தன்னை சந்திக்க கட்சி தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  சிறைவிதிகளின்படி ஒரு மாதத்துக்கு 2 பார்வையாளர்கள்தான் சிறைவாசியை சந்திக்க முடியும். ஆனால் இந்த விதிமுறை மீறப்பட்டு சசிகலாவை 31 நாட்களில் 19 பேர் சிறைக்கு சென்று சந்தித்திருக்கிறார்கள். அதில் சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள், டிடிவி தினகரன், குடும்ப உறவினர்கள், வளர்மதி, கோகுல இந்திரா போன்ற கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேசியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விகளுக்கு சிறை நிர்வாகம் அளித்த பதிலில் இந்த தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

தற்போது நரசிம்ம மூர்த்தி, சிறை விதிகளை மீறிய சசிகலா மீதும் அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சசிகலாவின் விதி மீறல்களுக்கு துணைபோன அதிகாரிகள் பயந்துபோய் இருக்கிறார்கள்.