சென்னை: கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்,  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்,  இன்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில்  சசிகாந்த் செந்தில் காங்கிரசில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இந்த நிகழ்வின்போது, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் ஆகியோரும் உடனிருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ். 2009 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான  இவர்,   கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணைஆணையராக பணியாற்றியவர். இவர் 2009-12 வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.  மக்கள் நலனுக்காக  இவர் பணியாற்றியதால், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு விரோதியானார்.  இதன் காரணமாக கடந்த ஆண்டு  (2019) தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த், அதன்பின்  மோடி தலைமையிலான பாஜக  அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், பேசிய சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து கூறிய சசிகாந்த், “கடுமையான மன உளைச்சலிலும், நம் உடன் இருப்பவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதவி விலகினேன். நாம் வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தோம், இதே மாதிரியான சமூகத்தை அடுத்த தலைமுறைக்கும் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். வரும் காலத்தில் மக்களோடு மக்களாக இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்ற நான் துணையாக இருப்பேன்.

பாஜகவின் கொள்கை வெறுப்பை விதைக்கும் கொள்கை. அவர்கள் மக்களுக்கு எதிராக மக்களையே திசை திருப்புகிறார்கள். எந்த பொறுப்பையும் எதிர்பார்த்து கட்சியில் இணையவில்லை. பாஜகவை எதிர்கொள்ள சரியான கட்சி காங்கிரஸ்தான் என நம்புகிறேன் “ என்றார்.

மேலும்,  அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ் தனது நண்பர் என்றும், ஆனால் அவரது கொள்கை வேறு தனது கொள்கை வேறு என்றும் பதிலளித்த சசிகாந்த் செந்தில், அரசியலில் இறங்கினாலும் ’பேண்ட் சர்ட்’ தான் அணிவேன் என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் புதிய பொலிவோடும், புதிய முகத்தோடும் திகழ்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தினேஷ் குண்டு ராவ், கர்நாடகாவில் நான் அமைச்சராக இருந்த போது சசிகாந்துடன் பணியாற்றியதாகவும், மக்கள் மனதை கவர்ந்த அதிகாரியாக அவர் விளங்கியதாகவும் பாராட்டினார். மத்திய அரசின் நாட்டை பிளவுபடுத்தும் மோசமான நடவடிக்கைகளால் வேதனையடைந்து தனது பதவியிலிருந்து விலகிய சசிகாந்த் செந்தில், கருத்தியல் ரீதியாக மிகவும் தெளிவுடன் இருப்பதாகக் கூறினார்.