டில்லி

என் டி டி வியின் உரிமையாளர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் மீது செபி விதித்த தடையை நிறவேற்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரபலாமான பிரணாய் ராய் மற்றும் அவர் மனைவி ராதிகா ராய் ஆகிய இருவரும் இணைந்து என் டி டி வி என்னும் செய்தி தொலைக்காட்சியை தொடங்கினார்கள். இந்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் வேறு பல சிறு நிறுவனங்களும் இணைந்திருந்தன. இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் மேலாண்மை இயக்குனர்களாக பொறுப்பு ஏற்றிருந்தனர்.

ராய் தம்பதியர் இணைந்து ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் என்னும் பங்கு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனங்களில் வாங்கி உள்ள கடன்கள் குறித்து சிறிய பங்குதாரர்களுக்கு தெரிவிக்கவில்லை என ஒரு புகார் எழுந்தது. குறிப்பாக விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்க்காக ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வாங்கிய கடன் குறித்து புகார் அளிக்கபப்ட்டது.

இந்த நிறுவனம் என் டி டி வி நிறுவனத்தின் 52% பங்குகளை மறைமுகமாக வாங்க இந்த கடனை பெற்றுள்ளதாக செபி யிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே பங்கு சந்தை கட்டுப்பாட்டு நிர்ணய வாரியமான செபி இந்த செய்கையை விதிமுறைகள் மீறியதாக அறிவித்தது. அதை ஒட்டி பிரணாய்,ராதிகா மற்றும் அவர்கள் ஆர் ஆர் பி ஆர் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்தது.

பிரணாய் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் என் டி டி வி தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் எனவும் செபி உத்தரவிட்டது.

செபியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்பாயத்தில் மனு செய்யபட்டது. அந்த மனுவை சாட் என அழைக்கப்படும் மேல் முறையீட்டு தீர்பாயம் விசாரித்தது. இந்த விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது வரை பிரணாய், ராதிகா மற்றும் அவர்கள் நிறுவனத்துக்கு செபி விதித்துள்ள தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.