மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சாத்தான்குளம் (Sathankulam) ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில்,  ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுக்கு உதவிய மதுரை சிபிஐ அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிக்கும் நோய் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவலர்கள் முருகன், முத்துராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 காவலர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.