சென்னை: தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காவல்துறையின் நடவடிக்கையும் கண்டித்தனர்.

மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் சாத்தான்குளம்  காவல்நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிறையில் தந்தை ,மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார்.

அவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், உதவி ஆய்வாளர்கள் இருவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக  ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.