ரியாத்: சவூதி அரேபியாவில் பணியாற்றும்  தொழிலாளர்கள், ஊழியர்கள்,  தங்களது நிறுவனங்களில் இருந்து வெளியேற, அந்நிறுவனத்தின்  ஒப்புதல் பெற தேவையில்லை என்பது தொடர்பாக  புதிய  தொழிலார் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதியசட்டம்  2021 மார்ச்சில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு வேலை செய்யும்  தொழிலாளர்களுக்கு இந்த சீர்திருத்தங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவில்  வெளிநாடுகளைச் சேர்ந்த  கோடிக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.  அங்கு வேலை செய்பவர்கள் கஃபாலா என்ற கடுமயான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பணியாற்றி வருகிறார்கள். இந்த  கஃபாலா  கட்டுப்பாடுகளால்,  பல வெளிநாட்டு தொழிலாளர்கள், அந்த நிறுவனங்களின் கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்டு,  அவதிப்பட்டாலும், அவர்களால் அந்த  நிறுவனங்க்ளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது. இதற்கான வழிவகை கஃபாலா கட்டுப்பாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது.   நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களால் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் வேறு நிறுவனத்துக்கு மாறவும் முடியாது, நாட்டை விட்டு வெளியே செல்லவும் முடியாது. சவூதி அரசின் இந்த நடிவக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. பணிச்சூழலில் திறனை மேம்படுத்ததும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதிய சீர்திருத்தங்கள் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதன்படி,  சவூதி அரேபியாவில் 2021 மார்ச் 14 முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், பணி மாறுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் (Exit/Re-entry) மற்றும் நாட்டை விட்டு இறுதி வெளியேறுதல் (Final Exit) போன்றவை தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை என்று சவுதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியரின் தொழிலாளர் ஒப்பந்தம் முடிந்தால் ஒரு வெளிநாட்டு தொழிலாளி முதலாளியின் அனுமதியின்றி வேறு வேலைக்கு மாறலாம். தொழிலாளி ஸ்பான்சரின் அனுமதியைப் பெறாமல் எக்ஸிட் re-entry யை அடித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என  சவூதி அரேபியாவில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் செய்து  தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய அந்நாட்டு அதிகாரிகள்,  தற்போதைய ஒப்பந்தம் காலாவதியானால், ஒரு தொழிலாளி ஸ்பான்சரின் அனுமதியின்றி வேறு நிறுவனத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. மறு நுழைவு மற்றும் இறுதி வெளியேறும் நடைமுறைகளையும் தொழிலாளி செய்ய முடியும். இந்த சட்டம் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொருந்தும். இந்த சட்டங்கள் அனைத்தும் 2021 மார்ச் 14 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கஃபாலா முறை முழுவதுமாக ஒழிக்க்கப்படவில்லை எனவும், புதிய சீர்திருத்தங்களால் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை கணிசமாக மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் போட்டுள்ள ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்படும். எனினும், வீட்டு வேலை செய்யும் சுமார் 37 லட்சம் தொழிலாளர்களுக்கு இந்த சீர்திருத்தங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.