சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

சீனாவில் நடத்தப்பட்ட இந்த தடுப்பு மருந்தின் முந்தைய சோதனைகளில் முறையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது நிரூபணமானது. சவூதி அரேபியாவில் இந்த சோதனை ரியாத், மக்கா மற்றும் தம்மத்தில் நடத்தப்படும் என்றும், இதில் சுமார் 5000 பங்கேற்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு குழுவினர் ஒப்பீட்டு கட்டுப்பாட்டு குழுவாக இருந்து போலி மருந்து பெறும் என்றும், மற்றொரு குழு குறைந்த அளவு தடுப்பு மருந்தைப் பெறும் என்றும் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட சவூதி அரேபியாவில், 280,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர். இது அதிக எண்ணிக்கை கொண்ட முதல் 15 நாடுகளில் ஒன்றாக உள்ளது. புதிய நோயாளிகளைப் பொறுத்த வரையில், ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5,000 என்ற உச்சத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,428 ஆக குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Thank you: Bloomberg