ரியாத்:

அரசு பணிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களை 2020ம் ஆண்டிற்குள் சவுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சவுதியில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தங்களது நாட்டு குடிமகன்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதை 2020ம் ஆண்டிற்கு முழு அளவில் அமல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்ப அரசு பணிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்று சிவில் சர்வீஸ் துறை துணை அமைச்சர் அப்துல்லா அன் மெல்பி தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை என்று வேறுபடுத்தி காட்டாமல் அனைத்து மட்டத்திலும் இருந்து வெளிநாட்டவரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 70 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களை வெளியேற்றி, அவர்களுக்கு பதிலாக சவுதி குடிமகன்களை அப்பதவியில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சவுதி அரசு இது போன்ற நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற வேலைவாய்ப்புகளை ரத்து செய்வதன் மூலம் வேலைக்காக காத்திருக்கும் 7 லட்சம் சவுதியர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மயத்தை விஸ்தரிக்கவும் 2030ம் ஆண்டிற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு பணியில் 66 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர். இதை 50 சதவீதமாக குறைக்கவும் ரியாத் திட்டமிட்டுள்ளது.