துபாய்: ஈரான் நாட்டினுடைய சாவிஸ் போர்க்கப்பலில் சிக்கிக்கொண்ட காயம்பட்ட ஒரு மருத்துவப் பணியாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது சவூதி அரேபிய ராணுவம்.

ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஹோடைடாவிலிருந்து 95 மைல் நாடிகல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய போர்க் கப்பலிலிருந்து மீட்கப்பட்டார் அந்த மருத்துவப் பணியாளர். அந்த மருத்துவப் பணியாளர் ஜிஸான் நகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை சவூதி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மாலிகி தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில், சவூதி அரேபியா சார்பாக, ஈரானிய தரப்பிற்கு செய்யப்படும் இரண்டாவது உதவியாகும் இது.

ஏமெனில் செயல்பட்டுவரும் ஈரானிய ஆதரவு பெற்ற ஷியா போராட்டக் குழுவான ஹொதி குழுவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது செளதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த இரு நாடுகளிடையே சமீப காலங்களில் நிலவிவரும் கடுமையான பதற்றத்திற்கு மத்தியிலும் இந்த உதவி மனிதாபிமான அ‍டிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தான் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி நடப்பதாகவும் சவூதி அரேபியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஈரானிய மருத்துவப் பணியாளரை காக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையிடம் ஈரான் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.