கொழும்பு:

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் பேசும் இஸ்லாமியரை கைது செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


இலங்கையின் கிழக்கு கடலோரத்தில் உள்ள காட்டான்குடியை சேர்ந்தவர் ஜஹரான் ஹாசிம். இவர் தமிழ் பேசும் இஸ்லாமிய மதபோதகர். இவரது குழுவைச் சேர்ந்த தமிழ் பேசும் 60 வயது முகமது அலியார் என்பரை கைது செய்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் முகமது அலியாருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது.

மத்திய இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைப்பின் நிறுவனரான முகமது அலியாருக்கும், ஜஹரானுக்கும் இடையேயான நிதி பரிவர்த்தனை ஆதாரம் கிடைத்துள்ளதாக இலங்கையின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது அலியார் சவுதியில் கல்வி பயின்றவர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.