சென்னை: இன்று பதவி ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர்  கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தமிழக  சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுடன் மேலும் 33 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. அதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்கும் வகையில்,  16-வது தமிழக  சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த முதல் கூட்டத்தொடரில் தேர்தலில் வெற்றிபெற்ற 234 சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில்,  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது டிவிட் பதிவில்,

இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும்   கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.