டில்லி
பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தோரிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல தேசிய வங்கிகளில் ஏழை மக்களுக்காக மத்திய அரசு ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை துவக்க உத்தரவிட்டது. இந்த கணக்கு வைத்திருப்போர் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச தொகை ஏதும் வைத்திருக்கத் தேவை இல்லை. இந்த கணக்கு வைத்திருப்போர் மாதத்துக்கு நான்கு முறை பணம் செலுத்த மற்றும் எடுக்க முடியும்.
ஆனால் இந்த வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து அபராதம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையொட்டி மும்பை ஐஐடி ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஒரு மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்வோரிடம் ஸ்டேட் வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.17.70 அபராதம் வசூலித்துள்ளது. சென்ற 5 ஆண்டுகளில் (அதாவது 2015-2020 ஆம் ஆண்டுகளில்) மட்டும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து மட்டும் ரூ.300 கோஃபி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதே கால கட்டத்தில் ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.9.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 3.9 கோடி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் உள்ளன.
ஸ்டேட் வங்கியில் நான்கு பரிவர்த்தனைக்கு மேல் செய்தால் ரூ.17.70 அபராதம் வசூலிப்பதே இவ்வளவு அபராத வசூலுக்குக் காரணமாக உள்ளது. ஸ்டேட் வங்கியில் மொத்தம் 12 கோடிக்கு மேல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் உள்ளன. இந்த ரூ.300 கோடியில் கடந்த 2018-19 ஆம் வருடம் ரூ.72 கோடியும் 2019-20 ஆம் ஆண்டு ரு.158 கோடியும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆணைப்படி 4 முறை பணப் பரிவர்த்தனை செய்யலாம் எனவும் அதற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் மதிப்புக் கூட்டல் சேவை என கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு வங்கிகள் அபராதம் வசூலிப்பது வங்கி நிர்வாக முடிவைப் பொறுத்தது எனவும் அவசியம் அபராதம் விதிக்க வேண்டியது இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிப்பதாக தெரியப்படுத்தி உள்ளது. மேலும் இங்கு மற்ற வங்கிகளை விட அதிக அளவில் அபராதம் அதாவது பரிவர்த்தனைக்கு ரூ.17.70 வசூலிப்பது மிகவும் அதிகம் என ஐஐடி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் ஏழைகளால் தொடங்கப்பட்டுள்ளதால் இந்த அபராதம் அவர்களுக்கு கடும் துயரத்தை அளிப்பதாகவும் ஐஐடி தெரிவித்துள்ளது.