சென்னை

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளார்களின் கணக்கில் இருந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக ஒரு  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது தொடர்ந்து வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வ நாதன் இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்..!

அதில் சென்னையில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓன் டைம் பாஸ்வர்ட் எண்ணை திருடியும் 2016 ஆம் ஆண்டிலும், கடந்த 6 மாத காலத்திலும் ஆன்லைன் மோசடிக்கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.   வங்கிகளின் பணபரிவர்த்தனையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்

சென்னையில் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த ஆறு மாதங்களில் பறிகொடுத்த தொகை குறித்த விபரங்களைகாவல்துறையினர் பட்டியலாக தயாரித்து இருந்ததை அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் விஸ்வநாதன் வழங்கினார்.

இந்த பட்டியலில் மொத்தம் 34 வங்கிகளின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.

அதில் கண்டுள்ளபடி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்றழைக்கப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்  547 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடியே 37 லட்சம் ரூபாயை பறிகொடுத்து உள்ளது.  இதனால் எஸ். பி ஐ வங்கி பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது..!

அதனை தொடர்ந்து இந்தியன் வங்கி  (வாடிக்கையாளர்கள் 284 பேர் 35 லட்சம் ரூபாய்), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (வாடிக்கையாளர்கள் 83 பேர் 82 லட்சம் ரூபாய்), ஐசிஐசிஐ வங்கி (வாடிக்கையாளர்கள் 107 பேர் 54 லட்சம் ரூபாய்) ஆக்சிஸ் வங்கி (வாடிக்கையாளர்கள் 78 பேர் 30 லட்சம் ரூபாய்) ஆகிய வங்கிகள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

அதே போல கடந்த 6 மாதங்களில் கிரெடிட் கார்டு மோசடியால் 209 பேரும், டெபிட்கார்டு மோசடியால் 1106 பேரும், அன்லைன் மோசடியால் 175 பேரும், பகிரப்பட்ட ஓ.டி.பியை திருடிய மோசடியால் 1315 பேரும், ஓ.டி.பியை வாடிக்கையாளருகே தெரியாமல் திருடிய மோசடியால்175 பேரும் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 7 கோடியே 15லட்சத்து 98ஆயிரத்து 058 ரூபாயை பறி கொடுத்துள்ளனர்.

இவர்களில் 9 சதவீதம் வாடிகையாளர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பறிபோன மொத்தத் தொகை 16 கோடியே 12 லட்சத்து 4ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து வெறும்  7 கோடியே 15 லட்சத்து 98 ஆயிரத்து 058 ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது

இதே போல் கடந்த 6 மாதங்களில் பறிபோன 4கோடியே 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 1கோடியே 43 லட்சத்து 19 ஆயிரத்து 611ரூபாய் மட்டுமே மீட்கப் பட்டுள்ளது .

மொத்தத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 12 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாயும், கடந்த 6 மாதங்களில் ரூ. 5 கோடியே 72 லட்சத்து 78 ஆயிரத்து 447 ரூபாயும் இன்னும் திரும்ப பெற முடியாமல் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இதுவரை நடந்த நிகழ்வுகள்.  இனிமேல் எவ்வளவோ?

திருட்டுக்கு பயந்து  மக்களை வங்கியில் பணத்தை சேமித்து வைக்கச் சொன்ன காலம் போய் வங்கியில் சேமித்து வைக்கப் பட்ட பணமே திருட்டுப் போவது காலக் கொடுமைதான்