புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வாங்க முடிவு செய்துள்ளது.

வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது யெஸ் வங்கி. இந்த வங்கி கடந்தாண்டு ரூ.1,500 கோடி இழப்பை சந்தித்தது.

இதனையடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேலும், அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கியை நிர்வகிக்க, எஸ்பிஐ யின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்பிஐ சேர்மன் ரஜ்னிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில், “சிக்கலில் உள்ள யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.2,450 கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது. யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்கும்” என்றார்.