இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார்.

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

இன்று (செப்டம்பர் 26) சென்னை செங்குன்றம் அருகில் உள்ள தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய மறைவுக்கு பலரும் எஸ்பிபி அளித்த பேட்டிகள், மேடைக் கச்சேரிகள் என வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .

இந்த நிலையில், தற்போது எஸ்பிபி – இளையராஜா – பாரதிராஜா மூவரின் நட்பை வைத்துப் படமெடுக்க விரும்புவதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் :-

“பல விஷயங்களின் கலவைதான் துக்கம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதிலும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை இழக்கும்போது, இனி வாழ்நாள் முழுவதும் அந்த நபர் இல்லாமல் வாழ வேண்டுமே என்ற பதற்றம் வரும்போது இருக்கும் துக்கம். அதை இப்போது உணர்கிறேன். நிலாவே போய் வா.

என் அபிப்ராயத்தில், எஸ்பிபி – இளையராஜா – பாரதிராஜா என்ற, போராடிக்கொண்டிருந்த மூன்று நண்பர்களும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வளர்ந்தது என்பது மிக அற்புதமான ஒரு கதை. அந்தக் கதையை என்றாவது திரையில் சொல்லும் ஆசை எனக்குள்ளது” என பதிவிட்டுள்ளார் .