டெல்லி:

வெளிநாடு செல்வதற்காக ஜாமினாக செலுத்தப்பட்ட ரூ. 20 கோடி பிணைத் தொகையை,  கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம் என்று  உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்பட  பல வழக்குகளில் சிக்கிய கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இவர்  வெளிநாடு செல்ல கடந்த ஆண்டு  அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அதற்காக ரூ.20 கோடி ரூபாய் பிணை வைப்புத்தொகை உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘நான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவின்போது,, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.20 கோடி பிணைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி, வெளிநாடு சென்று வந்தேன். அந்த பணம் இதவரை தனக்கு திருப்பி தரப்படவில்லை. . எனவே, நான் செலுத்திய ரூ.20 கோடியை திரும்ப வழங்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என கூறியிருந்தார்.

இந்த மனு மீது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு விசாரணை நடத்தியது. அதையடுத்து, கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.20 கோடி பிணைத் தொகையை அவரிடம் திருப்பித்தர வேண்டும்,’ என நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக கார்த்தி சிதம்பரத்துக்கு விரைவில் ரூ.20 திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.