டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு  பணியியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், சுகாதாரத்துறை  பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட வில்லை என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் கே கவுல் மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த விசாரணையின்போது, கொரோனா தடுப்பு பணியில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பது கிரிமினல் குற்றம் என எச்சரித்த நீதிபதிகள்,    மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் வழங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்தியஅரசை கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கின் இன்றைய விசரணையை தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு  பணியியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், சுகாதாரத்துறை  பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவிட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களின் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையானதை செய்யுமாறு  மத்திய அரசுக்கும் உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்டு 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.