டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ரமலான் மாதத்தில் வருவதால், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற் கிடையில் வரும் 7ந்தேதி இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலான் மாதம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  இஸ்லாமியர்களின் நோன்பு திறப்பு காரணமாகவும், வரும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால்,  வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீது உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, ரமலான் மாதத்தில் வாக்குப்பதிவை  காலை 5.30 மணிக்கே   தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம்  பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.