டெல்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டபோது, கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தியை எப்போது விடுதலை செய்வீர்கள் என மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு பல ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து,  கடந்த ஆண்டு (2010)  ஆகஸ்ட் 5-ம் தேதி மத்தியஅரசு ரத்து செய்யப்பட்டது, சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு  370-வது பிரிவை மோடி தலைமையிலான பாஜக அரசு பாராளுமன்றத்தில் சட்ட முடிவு கொண்டு வந்து  ரத்து செய்தது. பின்னர்  ஜம்முகாஷ்மீரை இரண்டாகப் பிரித்து சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள்  பொதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப்டடு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் அண்மையில் விடுவிக்கப்பட்டாலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்பட சிலர் ஓராண்டுக்கு மேலாக இன்னும் வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மெகபூபாவை விடுவிக்கக் கோரி அவரது மகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

அப்போது மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  இன்னும், எத்தனை நாட்களுக்கு வீட்டு சிறையில் வைத்திருப்பீர்கள்? ஓராண்டுக்கு மேலாக எந்த அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்?  எப்போது அவரை விடுவிப்பதாக உத்தேசம் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சோலிசிட்டர் இதனை உத்தரவில் பதிவு செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, இது தொடர்பாக  ஒருவாரத்தில்  பதிலளிக்க மத்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில நிர்வாகத்துக்கும்  உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.