டில்லி

ந்த ஆண்டு பூரியில் தேரோட்டத்தை அனுமதித்தால் ஜகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தடை விதித்துள்ளது.

ஒரிசா மாநில கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது.   கடந்த 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பாலபத்ரா, அவர் சகோதரர் ஜகந்நாதன் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் மூலவர்களாக உள்ளனர்.  இங்கு சுதர்சன சக்கரம் உள்ளது.

மூன்று மூலவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.   இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 கிமீ தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும்.   அங்கு 9 நாள் தங்கி இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ரதம் வந்து சேரும்.   அதன் பிறகு இந்த ரதங்கள் கலைக்கப்படும்.

சுமார் 14 அடி நீளம் உள்ள ஒவ்வொரு தேரும் தெருக்களில் செல்லும்  போது மக்கள் மேள தாளங்கள், இசைக் கருவிகளுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள்.  இந்த 10 நாள் உற்சவத்தை காண உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள்.  இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்தது.

ஒரிசா விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பூரி ஜகந்நாதர் தேரோட்டம் நடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும், லட்சக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது எனவும் தெரிவித்து இந்த விழாவுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் தினீஷ் மகேஸ்வரி, போபண்ணா ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  இதில் தலைமை நீதிபதி தனது உத்தரவில், ”கொரோனா தொற்று தீவிரமாக உள்ளபோது இந்த ஆண்டு மக்கள் உடல்நலம் பாதுகாப்பு காரணமாகப் பூரி ஜகந்நாதர் தேரோட்டத்தை அனுமதிக்க முடியாது.  இந்த விழாவில் 10 ஆயிரம் பேர் கூடினாலும் இது விபரீதமாகும்.

தற்போதுள்ள கொரோனா தீவிர நிலையில் மக்கள் மிகப்பெரிய அளவில் கூடுவதை அனுமதிக்க முடியாது.  அதை அனுமதித்தால் பூரி ஜகந்நாதர் எங்களை நிச்சயம் மன்னிக்க மாட்டார்.  இந்த ஆண்டு பூரி ஜகந்நாதர் கோவில் தேரோட்டத்துக்குத் தடை விதிக்கிறோம்.  கொரோனா பரவுதல் அதிகமாகி வருவதால் எவ்வித யாத்திரை மற்றும் திருவிழா நடத்த ஒரிசா அரசு அனுமதிக்கக்கூடாது “எனத் தெரிவித்துள்ளார்.